சென்னை: இலங்கை அரசின் இனப்படுகொலைக்குத் துணை போகும் இந்திய அரசைக் கண்டித்து மலேசியாவில் நாளை மாபெறும் பேரணி நடைபெறவுள்ளது.
இந்திய அரசைக் கண்டித்து நாளை நடைபெறவிருக்கும் இக்கண்டனப் பேரணியில் மலேசிய தமிழர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் அறங்காவலர் பசுபதி சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கிலும், இந்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்து மனு வழங்கும் நோக்கிலும், போரினை உடனே நிறுத்த சிறிலங்கா அரசை வலியுறுத்த வேண்டும் எனக் கோரியும், மலேசிய பொது அமைப்புக்கள் நாளை பிற்பகல் 1 மணிக்கு கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகத்திற்கு முன்பாக இந்த மாபெரும் கண்டனப் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
குறைந்தது 5 ஆயிரம் பேராவது இப்பேரணியில் கலந்து கொண்டு இந்திய அரசிற்கு மலேசிய மக்கள் தமது கண்டனத்தினை வெளிப்படுத்த வேண்டும் என பசுபதி கோரியுள்ளார்.
நூற்றுக்கணக்கில் அப்பாவி தமிழ் மக்கள் ஒவ்வொரு நாளும் கொல்லப்படுகிற வேளையில் அதைத் தடுத்து நிறுத்தாமல் இந்திய அரசு மெளனமாய் இருப்பது ஏன்?
ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கும் இந்த போருக்கு இந்திய அரசு துணை போவது ஏன்?
இந்திய நாட்டு வம்சாவளித் தமிழர்களான நமக்கு இந்திய அரசை நோக்கி கேள்வி கேட்க எல்லாவித தகுதியும் இருக்கிறது.
போரின் துன்பத்தினை தொடர்ந்து அனுபவிக்கும் மக்களுக்கு மனிதாபிமான முறையில் ஆதரவு வழங்குவது தவறாகாது. மனித உரிமைகள் மீறப்படுகின்ற போது இன்னொரு சக மனிதன் என்ற முறையில் அதற்காக கண்டனம் தெரிவிப்பது தவறாகாது.
ஈழத் தமிழ் உறவுகள் அங்கே நாளுக்கு நாள் அழிக்கப்பட்டு வருகின்ற வேளையில் அவர்களுக்காக கண்டிப்பாக குரல் கொடுக்க வேண்டியது நமது தார்மீக கடப்பாடு ஆகும்.
நம் தமிழ் உறவுகள் மீதான திட்டமிட்ட இனப் படுகொலையைக் கண்டித்து கண்டனக் குரல்கள் எழுப்புவது தமிழீழ மக்கள என்றென்றும் தலை நிமிர்ந்து வாழ வழி வகுக்கும்.
நம் உறவுகளின் துயர் துடைக்க நாம் முன்னெடுக்கும் இம்முயற்சி ஈழத்தில் அமைதி மலரச் செய்யும் என நம்பலாம்.
அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்த நடக்கவிருக்கும் இப்பேரணியில் அனைத்து மக்களும் அரசியல் கட்சிகள், பொதுக் கட்சிகள், அமைப்புக்கள் பேதமின்றி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அணித் திரள வேண்டும் என பசுபதி கேட்டுக் கொண்டுள்ளார்.